March 25, 2008

கலை உண(ர்)வு

சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது உணவு சம்பந்தமான AAHAR-2008 பன்னாட்டுக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட சில செல்படங்கள்








March 22, 2008

முசுடு சங்கரலிங்கமும்,புக்ஃபியஸ்டாவும்

உலகின் கடைசி மனிதனாக தனியே வாழத் தயாரா? என்று என்னிடம் யாராவது கேட்டால்,
"-என்னுடன் புத்தகங்களும் இருக்கும் பட்சத்தில்-சரி" என்று சொல்வேன்.அந்த அளவுக்கு, புத்தகங்கள் என் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன..
சின்ன வயதில் கோடை விடுமுறைகளில் பாட்டி சொல்லும் ராஜா கதைகளில் லயித்த மனம் வருடம் முழுவதற்கும் அதற்காக ஏங்கி ரத்னபாலா, அம்புலிமாமாக்களை இரண்டாம் வகுப்புப் படிக்கையிலேயே எழுத்துக்கூட்ட ஆரம்பித்திருந்தேன்.

வீட்டில் எல்லோரும் சினிமாவிற்கு சென்று திரையின் காட்சிகளில் தங்களை மறந்திருக்கையில் எனக்கு மட்டும் ஆபரேட்டர் அறை ஓட்டை வழியே வரும் வண்ணப்புகை மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.(முழுசா ஒரு ரூபா குடுத்து இவன படத்துக்குக் கூட்டிட்டு வந்தது வேஸ்ட் என்று எனது மூத்த அக்கா திட்டுவாள்)
அதற்கடுத்த சமயங்களில் என் டிக்கட் காசு காமிக்ஸ் புத்தகங்களாகிப் போனது(விஷ ஊசி வேங்கப்பா, ஸ்பைடர்மேன்,இரும்புக்கை மாயாவி)

கொஞ்சம் வளர்ந்து நான்காம், ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் முழுப்பரீட்சை விடுமுறையில் வீட்டில் உக்கிரான அறை என்னால் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு,கொலு வைப்பதற்கென்று பாட்டி பத்திரப்படுத்தியிருந்த பொம்மைகளை (ஆதிசேஷன் நாகம், மச்ச அவதாரம், ஆந்தை, குப்புறப்படுத்திருக்கும் சீனப்பாப்பாக்கள்)வெளியே விளையாடக் கொண்டு போவதைப் பொறுக்க முடியாத பாட்டி, கோபத்துடன்"வாசகசாலைக்குப் போடா" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்.வேறு வழியின்றி தே.கல்லுப்பட்டி நூலகம் அடைக்கப்படும் வரை அங்கேயே கிடந்து மஞ்சரி,அ.மாமா என்று எதையாவது வாசித்துக்கொண்டிருப்பேன்.
எட்டாம் வகுப்புப் படிக்கையில் கஷ்டப்பட்டு நூலகத்தில் உறுப்பினரானேன்.அதற்கு ஹெட்மாஸ்டரிடமெல்லாம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது.

அப்போதைய லைப்ரரியன் முசுடு சங்கரலிங்கம் (பட்டம்-உபயம்: நானும் என் நண்பன்ஜெயக்குமாரும்)லைப்ரரியை ஒரு மியூசியம் போலப் பாதுகாத்து வந்தார்.(புத்தகங்கள் படிப்பதற்கு அல்ல-பாதுகாப்பதற்கே என்பது அவர் பாலிசி)
அதிலும் நான் புத்தகம் எடுக்க வந்தால் என் மீதே கண்கொத்திப் பாம்பாய் இருப்பார்.
அவருக்கு சவால் விடும் வகையில் காலையில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு எட்டரைக்கு உள்ளே நுழைந்து தேட ஆரம்பித்தால்,பதினொன்றரைக்கு நூலக நேரம் முடிந்து அவர் என்னைக் குறிப்பாக முறைத்துக் கொண்டே,மேசைமணியை கடுப்பாக அழுத்தும் வரை
நிதானமாகத் தேடி விட்டு போனால் போகட்டும் என்று ஒரு புத்தகத்தை அவரிடம் நீட்டுவேன்.(சி.ஐ.டி.சங்கர்லால்,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்)
"வெலைக்கா வாங்கப் போற? ஏதாவது ஒண்ண எடுத்துட்டுப் போய்ட்டு, நல்லா இல்லாட்டி நாளைக்கு வந்து மாத்திக்க வேண்டியதுதான" என்று முணுமுணுப்பார்.அதையும் நான் மதியமே படித்து விட்டு சாயங்காலம் போய் வேறு புத்தகம் கேட்டு அவரால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறேன்."நாளைக்குத் தான் புத்தகத்தை மாத்த முடியும்" என்பது ரூல்.
மு.ச இல்லாத நாட்களில் உதவி நூலகர் விவேகானந்தனிடம் (இவர் மிகவும் சாது: எங்களுக்கு கருணை காட்டுபவர்)சொல்லிவிட்டு அன்அக்கவுண்டில் ஐந்து புத்தகங்களை எடுத்துச்செல்வேன்.வருடாந்திர ஆடிட்டிங்கில் கல்லுப்பட்டி நூலகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எண்வரிசைப்படி அடுக்கி வைக்க என் உதவி தேவைப்பட்டதால் சில மாதங்களிலேயே மு.ச. என் வழிக்கு இறங்கி வந்தார்.
விடுமுறைகளில் சாப்பிடுவது, தூங்குவது,பாத்ரூம் போகும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களிலும் நூலகத்திலேயே பழியாய்க் கிடந்ததால் இரண்டு வருடங்களில் பைண்டிங் அட்டையை வைத்தே அது என்ன புத்தகம் என்று சொல்லுமளவுக்குத் தேறியிருந்தேன்.
மு.ச கூட குறிப்பாய் ஏதேனும் புத்தகம் தேட என்னிடம்தான் கேட்கும் நிலை வந்தது.

எவ்வளவு நாளைக்குத் தான் இரவல் புத்தகங்களைப் படிப்பது?நமக்கென்று சொந்தமாக (அ.மாமா, காமிக்ஸ் தவிர) புத்தகங்கள் வேண்டாமா? என்று ஏங்க ஆரம்பித்தேன்.ராணியில் வந்த விளம்பரம் ஒன்றைப்பார்த்து,வி.பி.பி.யில் அனுப்பச் சொல்லி கார்டில் எழுதிப்போட்டு, முதன்முதலாக நான் வாங்கிய நவமணியின்"வெளிநாட்டுக்குப் போவது எப்படி?" எனக்கு வந்த போது எனக்குக் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.(நீங்கள் வாங்கிய முதல் புத்தகம் எது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?)

அப்போதெல்லாம் கிருஷ்ணா காஃபி, வெண்ணெய் இன்னும் சில சாமான்கள் வாங்க நாற்பது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மதுரைக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டியிருக்கும்
வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிவிட்டு,காவேரி மஹாலுக்கு எதிரில் இருக்கும் வெண்ணெய்க் கடையில் நான்கு கிளாஸ் மோர் குடித்துவிட்டு மாடர்ன்ரெஸ்டாரண்டில் மதியம் சாப்பிட வீட்டில் கொடுத்த பணத்தையும் கால்சியம் சாண்டோஸ் நாய்பொம்மை உண்டியலில் இருந்து எடுத்த என் சிறுசேமிப்பையும் சர்வோதய இலக்கியப்பண்ணை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், காலேஜ்ஹவுஸ் புக் ஷாப் என்று சுற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குவேன்.

இப்படியாகத் தொடர்ந்த பழக்கம் இப்போதும் சம்பளத்தில் ஐந்து சதவீதம் புத்தகங்களுக்காக செலவிடும் வரை நீடித்திருக்கிறது.
இதை ஒரு மூலதனம் என்றுதான் சொல்ல வேண்டும்.இருப்பினும், ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ போன்ற விலையுயர்ந்த மாத இதழ்களையெல்லாம் எப்படியாவது (இலவசமாக)படிக்க முடியாதா என்னும் தேடலுடன் அலைந்த நான் ஒரு நாள் இணையத்தில் கூகுள் அருளால் தற்செயலாக புக்ஃபியஸ்டா என்னும் தளத்திற்கு விஜயம் செய்தேன்.அறிவியல் முதல் ஆன்மிகம் வரை, ஆங்கில மொழித் தேர்ச்சி முதல் மேலாண்மை, தலைமைப் பண்பு, புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய சுய முன்னேற்றப் புத்தகங்கள் என்று இன்னும் ஏராளமான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கும் இணையதளம் அது.
ஸ்டீஃபன் கோவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆடியோ புத்தகங்கள் கூட உண்டு
சில நிமிடங்களிலேயே உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொண்டு,
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.முதலில் ப்ளாக்ஸ்பாட்டாக இருந்த இத்தளம் இப்போது அதிக வசதி மற்றும் சிறப்புகளுடன் www.bookfiesta4u.com மாக வளர்ந்துள்ளது.
வெறும் வதந்திகளையும், இந்த மெயிலை ஒன்பது பேருக்கு ஃபார்வர்டு செய்யாவிடில் ஒன்பது நாட்களுக்குள் ரத்தம் கக்கிச் செத்து விடுவீர்கள் என்பது போன்ற மிரட்டல் மெயில்களையும் அனுப்பாமல் புக்ஃபியஸ்டா போன்ற நல்ல பயனுள்ள இணையதளம் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து அவர்களது அறிவை வளர்க்கவும் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கவும் உதவுங்கள்.