January 5, 2008

வசதிகளற்ற மெளனம்

வசதி

"என் மெளனத்தைப் புரிந்து கொள்ளாவிடில்
வார்த்தைகளையும் முடியாதென்றாய்"
எவ்வளவு தகிப்பாய் இருப்பினும்
ஒண்டிக்கொள்ள இடமிருக்கும்
பாலையிலோ பள்ளத்தாக்கிலோ
வீசியெறியும் உன் வார்த்தைகளை விட
ஈர்ப்பு விசையற்ற வானில்
பிடிமானமின்றி அலைக்கழிக்கும்
உன் மெளனம்
வசதிகள் அற்றதே.

************************************

சில்லறைக் கேள்வி

கொடுத்து வைத்தது போல்
ஒவ்வொருவர் முன் வந்தும்
கையேந்தும் பிச்சைக்காரன்
மூன்று நொடிகளில் முகம் படித்து
நகர்ந்திடும் கை வேறொரு முகம் நோக்கி
ஒன்றில் செருப்பும்,மறுகாலில் பூட்சும்
கவனம் ஈர்த்து,யோசனையில்
பிச்சைக் கணத்தைத் தவறவிட்ட
என்னைப் பற்றி
என்ன நினைப்பான்?

**************************************

சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது

********************************

No comments: